வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஒப்பந்த தொழிலாளராகவே ஓய்வு பெறுவோமா?


டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேலை கொடுத்த அம்மா பூலோக ய்வு பெற்று புத்துலகில் நுழைந்து விட்டார். டாஸ்மாக் ஊழியர்களான நம்மை 2003ல்   வேலை வாய்ப்பு அலுவலக மூப்பின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தேர்ந்தெடுத்தது முதல் இன்று வரை தற்காலிக ஒப்பந்த பணியாளராகவே பணியாற்றி வருகிறோம். நம்மில் பார் உதவியாளராக பணி பெற்று தற்பொழுது கடை விற்பனை உதவியாளர்களாக பணியாற்றும் பலரும் அடுத்த சில வருடங்களில் ஓய்வு பெறும் வயதை அடைந்து விட்டனர். மேலும் நம்மை கடந்த 13 வருடங்களாக தொழிலாளர்களுக்கான எவ்வித அரசு சலுகைகள் வழங்காமல் ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்து பணி வாங்கி வருகின்றனர். சென்ற தேர்தலில் திமுக மதுவிலக்கு கொண்டு வந்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க இருப்பதாக கூறியது.  அம்மா டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்கள். நாம் அவர்களின் வாக்கை நம்பி தொடர்ந்து பணியில் இருந்தோம். அம்மா மரணம் தொடர்ந்து அடைத்து வரும் கடைகள் என்கின்ற சிக்கலான சூழ்நிலையில் தற்பொழுது நாம் உள்ளோம்.




இந்நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் குறித்து உச்சநீதிமன்றம் கடந்த 2016 அக்டோபர் 25ல் சிறப்பான தீர்ப்பு ஒன்றை கூறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவர், நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தமக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், நிரந்தரப் பணியாளர்களையும், தற்காலிக ஊழியர்களையும் ஒன்றாக கருத முடியாது என்று கூறி அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து ஊழியர் தொடர்ந்த வழக்கில்,  ‘‘20 ஊழியர்களுக்கும் கூடுதலாக நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜே.எஸ். கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதாவது . தற்காலிகத் தொழிலாளர்கள், தினகூலிகள், காஷூவல் தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் எந்த வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்களோ அந்த வேலையை செய்து கொண்டிருக்கும் நிரந்தர தொழிலாளிக்குரிய குறைந்தபட்ச ஊதியத்தை அகவிலைப்படியோடு பெறுவதற்கு உரிமை பெற்றவர்கள் என கூறியுள்ளது. எனவே சமவேலைக்கு சமஊதியம் என்ற கோட்பாடு நம் டாஸ்மாக்  தொழிலாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


நமது டாஸ்மாக்கில் நிரந்தர பணியாளர்கள் 300ம் சொச்சமே உள்ளனர். நிரந்தர பணியாளர்களில் ஓஎ (OA) வாங்கும் சம்பளம் பட்டம் முடித்த  மேற்பார்வையாளர்கள் வாங்குவதில்லை. இதை எதிர்த்து எந்த சங்கமும் ஊழியரும் இன்னும் நீதிமன்றம் என்ன தகவல் உரிமைச் சட்டத்தைக்கூட பயன்படுத்த வில்லை. ஆனால் தங்களுக்குள் யார் கூடுதல் விலையில் சம்பாதிப்பது என்பதற்காக கடை மேற்பார்வையாளர்1 மற்றும் கடை மேற்பார்வையாளர்2ம் வழக்கிற்கு செல்கின்றனர். டாஸ்மாக் ஊழியர்களே நாம் கூடுதல் விலை விற்பனையால் நமக்கான அனைத்து சலுகைகளையும் இழந்து விட்டோம். உண்மையில் கூடுதல் விலை  விற்பனையால் அதிகாரிகளின் புரோக்கர்களும், ஆளும்கட்சி சங்கங்கமும், மந்திரியும், அதிகாரிகளுமே பெருமளவில் சம்பாதித்தனர் மற்றும் வருகின்றனர். 


அடைத்த மற்றும் அடைக்கப்பட்டு வரும்  கடைகளில் நம் கடை இல்லை என திருப்தி கொண்டு மகிழ்ந்து வருகிறோம். கடைக்கு ஏழு பணியாளர்கள் என்பது கூடிய விரைவில் பத்து மற்றும் பன்னிரெண்டு என இன்னும் அதிகரிக்கலாம். அடைக்கும் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி அவசியம் என்பதை அரசிற்கு உணர்த்திட அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டு மந்திரியையும் அதிகாரிகளை சந்திக்க வேண்டும்.  நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் பெற அனைத்து சங்கங்களும் ஊழியர்களும் இனியும் தாமதிக்காமல் நடவடிக்கையில் இறங்குவோம்.  கூடிய விரைவில் ஓய்வு பெறவுள்ள பணியாளர்கள் தொடர்ந்து தங்களின் பலன்களை பெற ஒற்றுமையாய் டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக்காட்டி பலன் பெற முயற்சிப்போம். புதிதாக  ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் இவ்வாட்சியில் பணிநிரந்தரம் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் பெற ஒன்றுபடுவோம்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல பதிவு நன்றி தோழர்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
LR சொன்னது…

ஆம் இது கூடாதெரியவில்லை

பெயரில்லா சொன்னது…

yes pa