திங்கள், 13 அக்டோபர், 2014

டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?


டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?

சமீபத்திய தினசரி செய்தி பத்திரிக்கையில் வந்த விபரம்:

டாஸ்மாக்கில் நடந்த கையாடல் விவகாரம் குறித்து உயர்அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க 18 பேர் கொண்ட குழு (பறக்கும் படை) அமைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில், நிர்வாக ரீதியாக 38 மாவட்ட மேலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 17 பேர் துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்கள் எம்.பி.ஏ. பட்டதாரிகள். சோ.அய்யர்  டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்தபோது,  முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர் தான் தற்போது டாஸ்மாக் இணை மேலாண் இயக்குநராக இருக்கும் மோகன். 

டாஸ்மாக் இணை மேலாண் இயக்குநர் என்ற பதவி மோகன் அவர்களுக்காகவே  உருவாக்கப்பட்டது. இதுவரை 10க்கும் மேற்பட்ட துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பு டாஸ்மாக் மேலாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார் திரு மோகன் அவர்கள். நெல்லை (சுப்பிரமணியம்) மற்றும் திருச்சி(மணிவேல்) மாவட்ட மேலாளர்களை(துணைமாவட்ட ஆட்சியர்கள்) சஸ்பெண்ட் செய்துள் ளார். இதனால் துணை மாவட்டஆட்சியர்களான டாஸ்மாக் மேலாளர்கள், தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து மோகன் மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஊழியர்களும் மாத மாமுல் கேட்பதாலேயே கூடுதல்விலை, இருப்புகுறைபாடு போன்ற தவறுகளை செய்வதாக கூறுகின்றனர்.


முறைகேடுகள் குறித்த நமது டாஸ்மாக் செய்திகள் பார்வை

முறைகேட்டின் துவக்கம்.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகளுக்கு முதல்முக்கிய காரணம் அரசியல் தலையீடுகளாகும். மாவட்ட மேலாளர் பணியிடம் காலி ஏற்படுகின்றதென்றால் அதற்கு பலலட்சங்களை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அதிகாரிகளை நியமிக்கின்றனர் அரசியல்வாதிகள்.அவர்கள் பதவியேற்றவுடனே தங்களுக்கான புரோக்கர்களை நியமித்து எப்படியெல்லாம் போட்ட பணத்தினை எடுப்பதும் மற்றும் வெட்கமேயின்றி பணம் பார்ப்பதும் என்ற பணியினை முதல் பணியாக எடுத்துச் செய்கின்றனர்.

இவர்களுக்கு அரசு தரும் சம்பளம் மதிக்கத்தக்க வகையில் இருக்கும் பொழுதே இவர்கள் பலவழிகளில் லஞ்சம் பெருவதே நோக்கமென கொள்கின்றனர்.காலையில் அலுவலகத்தில் நுழைந்தவுடனேயே பணத்திற்கான வழிகளை அலுவலகப்பணியாளர்கள் சொன்னால் தான் இவர்கள் முகங்கள் மலர்கின்றன. இதில் பணியேற்று இருக்கக்கூடிய நாம் சார்ந்த நிறுவனத்தினை நல்ல முறையில் நடத்தி அதில் கிடைக்கும் அபரிமித மிச்சங்களை எடுத்துக்கொள்வோம் என்று இல்லாமல் நிறுவனம் அழிந்தாலும் பரவாயில்லை.இன்று எனக்கு பணம் கிடைக்கின்றதா என்ற பார்வையில் பணிகளை கவனிக்கின்றனர்.

பார்களின் ஏல நடவடிக்கைகளில் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் அவர்களின் டோக்கன்கள் பெற்றவர்களுக்கே ஒதுக்கப்படுகின்றது.இந்த டோக்கன்கள் பலலட்சங்களாக, பகுதிகளுக்கு தகுந்தபடி விற்பனை செய்யப்படுகின்றது. இத்தனை லட்சம் பணம் கொடுத்து பார் எடுப்பவன் முறைகேடுகளை நோக்கிதானே பயணிப்பான். இவ்வாறு டாஸ்மாக் முறைகேடுகளுக்கு அவ்வப்போது ஆளும் அரசியல்வாதிகளே முழுமுதல் காரணமாக இருக்கின்றனர்.


டாஸ்மாக் முறைகேடுகளுக்கு முதல் காரணம் அரசியல்வாதிகளும் அடுத்ததாக அதிகாரிகளும், அதிகாரிகளுக்கு உதவும் புரோக்கர் மேற்பார்வையாளர்களுமே காரணமாகும். அதிகாரிகளையும் அதிகாரிகளின் புரோக்கர் மேற்பார்வையாளர்களையும் ஒடுக்குவதில் திரு மோகன் டாஸ்மாக் இணை மேலான் இயக்குநர் அவர்கள் ஓரளவு வெற்றிகண்டாலும் இன்னும் இந்த அரசியல்வாதிகளிடமிருந்து டாஸ்மாக் நிர்வாகத்தினையும் ஊழியர்களையும்  காப்பாற்றும் பொறுப்பு இருக்கின்றது. இன்றும் அரசியல் தலையீடுகளும்,அதிகாரிகளின் லஞ்சங்களும் தொடர்கின்றது. பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கண்ணியமான ஊதியத்தினை வழங்கினால் மட்டுமே கூடுதல்விற்பனை மற்றும் இருப்பு குறைபாடு போன்ற தவறுகளை நோக்கி செல்லாதவாறு ஊழியர்களும் இருப்பர். தாங்கள் தவறிழைக்காமல் இருக்கும்பொழுது அரசியல்வாதிகள்,அதிகாரிகள் தவற்றினை உலகிற்கு வெளிபடுத்துவர். டாஸ்மாக்கில் முறைகேடுகள் ஒழிக்கப்பட அரசியல் தலையீடு ஒழித்தல் அதிகாரிகள் லஞ்சம் ஒழித்தல் மற்றும் முறையான ஊதியம் வழங்குவதே சரியான நடவடிக்கையாக அமையும்.



கருத்துகள் இல்லை: