வெள்ளி, 14 நவம்பர், 2014

இரவெல்லாம் மது விற்பனை இரக்கமில்லா அரசு


தமிழகம் முழுவதும் 24மணி நேரமும் எது கிடைக்கின்றதோ இல்லையோ மது கிடைக்கும். எப்படி? டாஸ்மாக் கடை திறந்து இருப்பது தான் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தானே என்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் தமிழகநிலை தெரிய தமிழ்மகனாக இருக்கின்றீர்கள் என அர்த்தம். டாஸ்மாக் கடைதான் இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகின்றதே ஒழிய ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் பார்கள் 24மணிநேரமும் இயங்குகின்றன. இந்த இரவு நேர விற்பனைக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை அடைக்கும் முன்பு இவர்கள் விரும்பும் சரக்குகளை கொடுக்கவேண்டும். இதில் சரக்கு வந்தவுடன் குடிமகன்கள் விரும்பும் சரக்கினை இரவு விற்பனைக்கு எடுத்து கொடுக்க வற்புறுத்துவர். இந்த சரக்குகளுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு உரிய தொகையை கொடுப்பார்களா என்றால் அதுவுமில்லை. விற்று முடித்து அவரிடம் கேட்டால் இவர் இவரிடம் கேட்டால் அவர் என அழைக்கழிப்பு வேறு.


இந்த நேரத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் கடைக்கு சரக்கு இருப்பு பார்க்க வந்துவிட்டால் ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும். காலை கடை திறந்தவுடன் இருப்பு சரிபார்க்க ஆட்கள் வந்துவிட்டால் டாஸ்மாக் ஊழியர் நிலை அதோகதி தான். இந்த இரவுநேர விற்பனைக்கு சரக்கு கொடுத்ததால் பணி இழந்த டாஸ்மாக் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகம். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த இரவு நேரவிற்பனையை காவல்துறை கண்டுகொள்வதில்லை. காரணம் கிடைக்கும் லஞ்சமும் ஆளுங்கட்சியினர் நடத்தும் பார்கள் என்பதால் இந்த நிலை தொடர்கின்றது. 

இந்த இரவுவிற்பனையால்   டாஸ்மாக் ஊழியர்கள் பணியிழப்பு தொடர்ந்து வந்த காரணத்தால் கோவை டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதன்படி அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு இனி பார்களுக்கு இரவு விற்பனைக்கு சரக்கு கொடுப்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றி செயல்பட துவங்கினர்.
கோவை டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு ஆளும்கட்சி பார் உரிமதாரர்களுக்கு பயம் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடைஎண் 1645 கடைமேற்பார்வையாளர் ஜீவா 02.11.2014 அன்று இரவு 10மணிக்கு கடையை அடைத்து கணக்கு பார்த்து கொண்டிருந்த வேலையில் பார் உரிமதாரர்கள் இரவுவிற்பனைக்கு சரக்கு கேட்டனர். 


டாஸ்மாக் ஊழியர்கள் எடுத்திருக்கும் நிலையை கூறி சரக்கு கொடுக்க மறுத்துள்ளார் ஜீவா. உடன் பார் உரிமதாரருடன் பார் ஊழியர்களும் இணைந்து ஜீவாவினை சாதியினை கூறியும் கெட்டவார்த்தைகளை கூறி தரம் தாழ்த்தி பேசியதுடன் அடித்தும் காயப்படுத்தி உள்ளனர். இந்த நிலையிலும் கடையின் விற்பனை பணத்தினை பாதுகாத்து காலையில் வங்கியில் கட்டிவிட்டு அரசுமருத்துவமனையில் உட்சிகிச்சை பெற்று வருகிறார் ஜீவா. 

டாஸ்மாக் ஊழியர் தாக்கப்பட்ட நிகழ்விற்கு பிறகு கண்டித்து ஆர்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கின்றது அரசு. அடித்த பார் உரிமதாரர் ஆளும்கட்சி என்பதால் வழக்குப்பதிவு செய்யவும் மறுத்தது காவல்துறை. டாஸ்மாக் ஊழியர்களின் தொடர்போராட்டத்தால் தற்பொழுது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் முக்கிய குற்றவாளியினை வேண்டுமென்றே பிடிக்காமல் காலம்தாழ்த்திவருகிறது காவல்துறை. 



டாஸ்மாக் நிர்வாகமோ பார் உரிமத்தினை ரத்து செய்யாமல் விளக்கம் கேட்டு இருப்பதாக தன் பங்கிற்கு நடிக்கின்றது.


டாஸ்மாக் ஊழியர்கள் பலரும் தேர்தல் பணிசெய்து கொண்டுவந்த இந்த ஆட்சியில் ஊழியர் விரோத போக்கு தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. உடன் தமிழக அரசு இந்த விசயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரினை கைது செய்வதுடன் பார் உரிமத்தினை உடன் ரத்து செய்யவேண்டும் 
தமிழகமெங்கும் இரவு நேர மதுவிற்பனையை உடன் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.

கருத்துகள் இல்லை: